Tamil News

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி முடிவு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் கடற்கரை பகுதி ஒன்றில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்ப தகுந்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது நாளாக இன்றும் கனரக இயந்திரம் கொண்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த அகழ்வு பணியின் போது தொல்பொருள் திணைக்களம் பிரதேச செயலகம் கிராம சேவையாளர் தடயவியல் பொலிசார், விஷேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கடற்கரையில் காணப்பட்ட குறித்த பகுதியானது முற்றுமுழுதாக அகழப்பட்டுள்ளதுடன் அதில் நின்ற மரங்கள் முற்றாக அகற்றப்பட்டு 15க்கும் மேற்பட்ட பனை கன்று வடலிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டப்பட்ட நிலையில் இன்று (27) மாலை 5.45 மணி வரை அகழ்வு பணிகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இடத்தினை மூடுமாறு நீதிபதி பணித்திருந்தார்.

குறித்த பகுதியில் 13 அடி ஆளமும் 17 மீற்றர் நீளம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.

Exit mobile version