Tamil News

இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று (25) காலை அகழ்வு பணியானது ஆரம்பமாகியிருந்தது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று நேற்றைய தினம் பிற்பகல் அகழ்வுப்பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைகளோ மீட்கப்படாத நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இன்றையதினம் காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வு பணியானது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ள போதும் நிலத்திற்குள் இருந்து தகரங்களும், ஒலிநாடா ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. மேலும் நிலத்தினை தோண்ட தோண்ட நீர்வர தொடங்கியுள்ளதால் நீரை வெளியேற்றும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை புதைக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version