Site icon Tamil News

திண்டுக்கல் – மதுபோதையில் நேர்ந்த பயங்கரம்… இலங்கை அகதி கழுத்தை நெரித்துக் கொலை!

திண்டுக்கல் அருகே மதுபோதையில் இலங்கை அகதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை, பொலிஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு ஆனந்தக்குமார் (40) என்பவர் வசித்து வந்தார். பெயின்டரான இவருக்கும் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி ஆனந்தகுமாரின் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு ஆனந்தக்குமார் வீட்டில் தூங்கச் சென்ற நிலையில், இன்று காலையில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஆனந்தகுமார் சடலமாக கிடந்திருக்கிறார். தகவலறிந்து அங்கு வந்த வத்தலக்குண்டு பொலிஸார், ஆனந்தக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், நேற்று இரவு நாகராஜ் ஆனந்தக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்ததால் அவரைப் பிடித்து விசாரித்தது பொலிஸ். அப்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. நேற்று இரவு வழக்கம் போல் ஆனந்தக்குமாரும், நாகராஜும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது.

ஆத்திரத்தில் இருந்த நாகராஜ், வீட்டில் இருந்த துண்டு ஒன்றை எடுத்து ஆனந்தக்குமாரின் கழுத்தில் போட்டு நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அச்சத்தில் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி இருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Exit mobile version