Site icon Tamil News

ஐபிஎல்லில் விளையாடவே முடியாத சிஎஸ்கே வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) இடையே 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டிக்கு பிறகு அம்பத்தி ராயுடு இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வதற்கு அம்பதி ராயுடு உதவினார்.  எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ராயுடு ஐபிஎல் வரலாற்றில் 6 முறை கோப்பையை வென்ற அணியுடன் இருந்துள்ளார்.  2018, 2021 மற்றும் 2023ல் சென்னை அணியிலும், 2013, 2015 மற்றும் 2017ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.  இருப்பினும், ராயுடு ஐபிஎல் போட்டிக்கு பிறகு 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடினார்.

ராயுடு தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) லீக்கில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஜனவரி 20 சனிக்கிழமையன்று துபாய் கேப்பிடல்ஸ் (DC) அணிக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயுடு களமிறங்கினார்.  ராயுடு ஒரு ரன் மட்டுமே எடுத்தாலும், அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரனுக்காக அவர் இந்த சீசனில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வு பெற்று, தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடினாலும், அவரால் மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது சாத்தியமில்லை. பிசிசிஐ விதிகளின் படி,  இந்திய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியும். எனவே, ஐபிஎல் தவிர, எந்த ஒரு வெளிநாட்டு லீக் அல்லது லெஜண்ட் லீக், ஃபிரான்சைஸ் அடிப்படையிலான டி20ஐ லீக்கில் விளையாடும் எந்த இந்திய வீரரும் மீண்டும் ஐபிஎல்லில் விளையாட முடியாது. ஐபிஎல் தவிர இந்திய உள்நாட்டு மாநில அணிக்காக அல்லது மீண்டும் தேசிய அணிக்காக விளையாட முடியாது.

கடந்த ஆண்டு, ராயுடு மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) டல்லாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்தார், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் தொடக்க சீசனில் விளையாடவில்லை.  ராயுடு 2024 ILT20 விளையாடும் ஒரே இந்தியர், ஆனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2023 சீசனில் விளையாடிய ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதானுக்குப் பிறகு இந்த லீக்கில் விளையாடும் மூன்றாவது இந்தியர் ஆவார்.

கடந்த டிசம்பரில் அம்பதி ராயுடு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் யுவஜன ஸ்ராமிக்க ரைத்து காங்கிரஸ் கட்சியில் (YSRCP) சேர்ந்த எட்டு நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  அரசியலில் இருந்து ஓய்வு எடுப்பதாகவும், தனது எதிர்கால நடவடிக்கை குறித்து விரைவில் தெரிவிப்பதாகவும் அந்த சமயத்தில் உறுதிப்படுத்தினார்.  பிறகு துபாயில் நடைபெற இருக்கும் ILt20ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளதால் கட்சியில் இருந்து விலகியதாக கூறினார்

Exit mobile version