Site icon Tamil News

கிளப் வசந்த கொலை – இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் சாரதி கைது

‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் கார் சாரதி ஆகியோர் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் நாகொட மற்றும் அகுகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை பின்வத்த பகுதியில் தங்கியிருப்பதாக பாணந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபர்களை பின்வத்த பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் காரில் இருந்து வேனுக்கு மாறி அங்கிருந்து கடவத்தைக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாத்தறை நோக்கி பயணித்துள்ளதாக இதுவரையான விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version