கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் இலங்கையர்கள் 6 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதில் இருந்து தப்பி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 06 பேர் கொலை செய்யப்பட்ட ஒட்டாவா படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதுடைய இலங்கையர் நேற்று தொலைபேசியின் வாயிலாக ஒட்டாவா நீதிமன்றில் ஆஜரானார்.
இரண்டாவது நாள் விசாரணை 4 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகநபரின் மனநிலை தொடர்பில் விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென அந்நாட்டின் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர் ஃபேப்ரியோ டி சொய்சா தற்போது ஒட்டாவாவின் கார்லேட்டன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனது பெயரையும் பிறந்த திகதியையும் மெல்லிய குரலில் கூறியுள்ள நிலையில், அதிகாரிகள் அதை தெளிவாகவும் சத்தமாகவும் சொல்லும்படி கூறியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், குற்றச்சாட்டில் மாற்றமில்லை என கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான ஃபேப்ரியோ டி சொய்சா கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.