Site icon Tamil News

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து : 20 பேர் நீரில் மூழ்கி மாயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று (01.06) 7 மணியளவில் (0230 GMT) பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற படகு கிழக்கு நங்கர்ஹாரின் மொமண்ட் தாரா மாவட்டத்தின் பசாவுல் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியது” என்று மாகாணத்தின் தகவல் துறைத் தலைவர் குரைஷி பட்லூன் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாகவும், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நங்கர்ஹார் தகவல் மற்றும் கலாச்சாரத் துறை, அதிகாரிகள் அந்த பகுதிக்கு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளதாக ஊடகங்களுடன் பகிர்ந்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக மாகாண அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருகிலுள்ள பாலம் இல்லாததால், அப்பகுதியில் வசிப்பவர்கள், மோசமான நிலையில் படகுகளைப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கிறார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version