Tamil News

மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் நினைவாக இரத்ததான முகாம்!

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(02) யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

பிரகாஸினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.

சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.அந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version