Site icon Tamil News

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்: அதாவுல்லா மீது சாணக்கியன் கடும் விமர்சனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா கலந்து கொண்டு மாவட்ட பிரச்சினைகளை பேச விடாது தடுக்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

”அதாவுல்லா எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் தெரியாது.

கடந்த கால கூட்டங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் பேசி ஆராயப்படும் அதாவது கல்வி, சுகாதாரம், விவசாயம் என வரும் அதன் ஒழுங்கில் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும்.
ஆனால் தற்போதைய கூட்டத்தில் சரியான ஒழுங்கில் கூட்டம் இடம்பெறாது. அவர்களுக்கு ஏற்றாற்போல் கூட்டத்தை நடத்துகின்றார்கள்.

இல்மனைட் அகழ்வினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி புதுப்பிக்க கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர் அதனை கதைப்பதற்கு நேரம் வழங்குகின்றார்கள் இல்லை.

மென்டிஸ் கம்பனியின் கழிவுகள் நீர்நிலையில் கலந்து மீன்கள் இறந்தது, விவசாயிகளுக்கு சரியான முறையில் நஷ்ட்டஈடு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கதைக்க நேரம் வழங்கவில்லை.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகள் கொல்லப்படுவது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கதைப்பதற்கும் நேரம் வழங்கவில்லை .

மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதனை கட்டுப்படுத்த செயற்பாடுகளை முன்னெடுக்காது மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது.

மாந்தீவில் சிறைச்சாலை அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது அதனை நிறுத்த வேண்டும் என கடிதம் அனுப்பவேண்டும் என கேட்டபோது அதனை சிறைச்சாலைக்கு கொடுத்தால் என்ன என சந்திரகாந்தன் கூறுகின்றார்.

கிரான் குளம் பகுதிகளில் உள்ள அரச நீர்ப்பாசன காணிகளை நிரப்பி அபகரிக்கின்றார்கள் அவற்றிற்கான ஒரு தீர்வுகள் எட்டப்படுவதற்கு ஒரு முன்னெடுப்புகளையும் செய்ய முடியாத நிலை.

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் சரியான முறையில் இன்னமும் இடம்பெறவில்லை ஆனால் கூட்டம் இடம்பெறாத பகுதிகளில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்று முடிவடைந்த தன் பிற்பாடு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றார்கள்.

இராணுவ முகாம்கள் அகற்றும் விடயம் தொடர்பாக கதைத்தால் அதற்கு ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என கேட்டால் அதனை என்னால் முன்வைக்க முடியாது என சந்திரகாந்தன் கூறுகின்றார் இவ்வாறு செயற்படுவதாயின் எதற்கு இந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்.” என்றார்.

Exit mobile version