Site icon Tamil News

லெபனானில் மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல்: டெல்அவிவ் நகரில் அபாய ஒலி

தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை இஸ்ரேலின் போர் விமானங்கள் மூன்றாவது நாளாகச் சூழ்ந்ததாக லெபனான் ஊடகங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 25) கூறின.அதேநேரம், தனது டெல் அவிவ் நகரில் விடியற்காலை அபாய ஒலிகளைத் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையில் நடைபெறும் சண்டையிலிருந்து தப்பிக்க இந்த வாரம் தெற்கு லெபனானில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக லெபனான் அதிகாரிகள் கூறினர்.

அதேநேரம், உள்ளூர் நேரம் காலை 5 மணியளவில் தென்பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியதாகவும் முன்னதாக இரவு முழுவதும் பிற பகுதிகளில் அது நடத்திய தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும் லெபனானின் அதிகாரபூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.நிலைமை மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மன்ற தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் நியூயார்க்கில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்நிலையில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அதிகரித்துவரும் நெருக்கடி குறித்து பைடன் தெரிவித்த கருத்துக்கு லெபனானிய வெளியுறவு அமைச்சர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.இருந்தாலும், இவ்விவகாரத்தில் வாஷிங்டன் தலையிட்டு உதவ முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

“அவரது கருத்து வலுவாக இல்லை. நம்பிக்கையளிக்கவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க உதவாது,” என்று லெபனானிய வெளியுறவு அமைச்சர் போவ் ஹபிப் சொன்னார்.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) இஸ்ரேல் தாக்கத் தொடங்கியதில் இருந்து பல்லாயிரம் மக்கள் தப்பி ஓடியதாகவும் சிலர் எல்லை தாண்டி சிரியாவை நோக்கி ஓடியதாகவும் அதிகாரிகள் கூறினர்.

துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து தப்பி ஓடிவந்ததாக செய்தியாளர்களிடம் பேசிய துராயா ஹார்ப் என்னும் 41 வயதுப் பெண் கூறினார். அவரைப் போல தப்பி வந்தவர்களுக்காக பெய்ரூட்டில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடாரத்தில் அவரது குடும்பம் தங்கி உள்ளது.

Exit mobile version