Site icon Tamil News

பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆப்பிளின் அடுத்த திட்டம்!

ஆப்பிள் சில மாதங்களாகவே AI தொழில்நுட்பத்தில் தங்களின் கால்தடத்தை பதிக்கும் வேலைகளில் யாருக்கும் தெரியாமல் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. மேலும் இதற்காக பல மில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை நிலவரங்கள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது. திடீரென ஒரே நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 71 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடியது. இதற்குக் காரணம் என்னவென்றால் ‘ப்ளூம்பெர்க்’ என்ற பத்திரிகையில் வெளியான ஒரு ரகசிய ரிப்போர்ட் தான்.

மைக்ரோசாப்ட், OpenAI மற்றும் கூகுள் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனமும் அவர்களுக்கென பிரத்தியேக AI Chatbot ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் பெயர் ஆப்பிள் GPT அல்லது AJAX என இருக்கலாம். மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ஆப்பிள் நிறுவனம் பல மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது என்ற உண்மை தெரிந்த சில மணி நேரங்களில், மக்கள் ஆப்பிள் நிறுவன பங்குகளை சரமாரியாக வாங்கி குவிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகவே ஒரே நாளில் ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு 71 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை சாம்சங் மற்றும் கூகுள் போன்ற பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனித்து வருகின்றனர். ஏனென்றால் AI தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனமும் இறங்கிவிட்டால், மக்களுடைய கவனம் முற்றிலும் அவர்கள் பக்கம் திரும்பிவிடும். இது மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

Exit mobile version