Site icon Tamil News

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிவிப்பு

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனராம பௌத்த நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக கனேடிய பௌத்த பேரவையின் தலைவர் நாரத கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கனடா, ஒட்டாவா, பஹேவன் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 06 பேர் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி நேற்று 06 ஆம் திகதி இரவு பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 19 வயதுடைய ஃபெப்ரியோ டி சொய்சா என்ற மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களைத் தொடர்புகொள்வதற்காக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனராம பௌத்த நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக கனேடிய பௌத்த பேரவை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தனுஷ்க விக்கிரமசிங்கவின் குடும்பத்தின் உறவினர்கள் இருவர் கனடாவுக்கு வர உள்ளனர்.

கொலை இடம்பெற்ற வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 40 வயதுடைய காமினி அமரகோன், முதலில் பண்டாரவளையை வசிப்பிடமாகவும், வெளிநாடு செல்வதற்கு முன்னர் ராஜகிரிய பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளுக்காக GoFundMe என்ற நிதியத்தை நிறுவ கனடாவின் பௌத்த பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 100,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் சேர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version