Site icon Tamil News

அமெரிக்கா-தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சிறுவன்: பெற்றோர் மீது நடவடிக்கை!

அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவத்தில், அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது வெஸ்ட்மோர் கவுண்டி. இதன் ஆளுகைக்கு கீழ் உள்ள ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் 4 வயதான ரோனி லின் என்ற சிறுவன் கடந்த ஜூலை 6ம் திகதி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான்.

படுக்கையறையில் கிடந்த சிறுவனை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர். அச்சிறுவன் கடந்த 6 மாத காலமாக தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறான்.இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவனின் பெற்றோர்களான லாரா ஸ்டீல் மற்றும் மைக்கேல் லின் ஆகியோர் அஜாக்கிரதையாக செயல்பட்டு குழந்தையின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தாக தெரியவந்துள்ளது.

இருவரும் கட்டிலுக்கு அடியில் குழந்தை கையாளும் வகையில் துப்பாக்கியை வைத்திருந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அந்த சிறுவன் விளையாடும் போது துப்பாக்கியை எடுத்து, தெரியாமல் தன்னைத் தானே சுட்டுக்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட வழக்கறிஞர் நிக்கோல் ஜிக்கரெல்லி ”இது ஒரு சோகமான ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். இப்படியான சம்பவம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மிக எளிய தீர்வு உள்ளது. பெற்றோர், பெரியவர்கள் தங்களது சொந்த உபயோகத்துக்கான துப்பாக்கிகளைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version