Tamil News

ஆனந்த் – ராதிகா சங்கீத் நிகழ்வில் ரோஹித், SKY, ஹார்திக்-க்கு அம்பானி குடும்பம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தனது மகனின் திருமண விழாவில் நெகிழ வைத்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி.

உலகின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா மும்பையில் விமரிசையாக நடைபெற்றது.

அதில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பங்கேற்றனர். அதில் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றனர்.

அவர்கள் மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி வருபவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சியை அளித்தார் நீதா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான நீதா அம்பானி, தனது மகன் திருமண நிகழ்ச்சிகளுக்கு இடையே, அதே மேடையில் இந்திய அணிக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

உலகின் செல்வாக்கான நபர்கள் இருந்த அந்த அரங்கில், அவர் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை மேடைக்கு அழைத்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத ரோஹித் சர்மா நெகிழ்ந்து போனார். அடுத்து கடைசி ஓவரில் கேட்ச் பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவை அழைத்தார்.

பின்பு, கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவை மேடைக்கு அழைத்தார். அவர்களை அணைத்து இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்ததற்காக வாழ்த்துக்களை கூறினார். அங்கு இருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று இவர்கள் மூவருக்கும் கை தட்டி வாழ்த்தினர்.

இதேவேளை, அம்பானி குடும்பம் கிரிக்கெட் மீதான தாங்கள் வைத்துள்ள மதிப்பை காட்டும் வகையில், இந்திய அணியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்காக நேற்று இரவு ஒரு சிறப்பு பூஜையை (வழிபாட்டு நிகழ்ச்சி) நீதா அம்பானி ஏற்பாடு செய்தார்.

Exit mobile version