Site icon Tamil News

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை விட்டு தங்கள் அன்றாட தேவைக்கு கூட வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்க்கத்தில் நிவாரண பணிகள் குறித்து தனது ரசிகர்களுக்கு புதிய உத்தரவை இட்டுள்ளார்.

அதில், ” சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version