Site icon Tamil News

சவூதியில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை சிறுமிக்கு பாலியல் தொல்லை

 

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய பயணியை விமான ஊழியர்கள் கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று (13) காலை 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திலேயே இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் 49 வயதான இந்தியர் ஆவார். புலம்பெயர்ந்த விமானப் பயணியான இவர், இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து வேறு விமானத்தில் இந்தியா திரும்பவிருந்தார்.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் ஒரு தாயும் அவரது இரண்டு சிறுமிகளும் பயணித்துள்ளனர்.

அவர்களில், 08 வயது 10 மாத வயதுடைய சிறுமி இந்த இந்தியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், இது குறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் முறைப்பாடு செய்ய இந்த தாய் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், இந்த இந்திய பிரஜையை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கட்டுநாயக்கா விமான நிலைய பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியையும் இந்திய பிரஜையையும் மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னர், இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version