Tamil News

சாலையில் நடந்து சென்றவர் கொடூரமாக குத்திக்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் சாலையில் நடந்து சென்றவரை இருசக்கர வாகனத்தில் வந்தவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (35). கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் கோவை துடியலூர் அடுத்த காசி நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலைகள் செய்து வருகிறார். இன்று அதிகாலை 6 மணி அளவில் தேநீர் அருந்துவதற்காக ஜெய்கணேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஜெய்கணேஷை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெய்கணேஷ், ரத்த வெள்ளத்தில் அருகே உள்ள கடையின் முன்பு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் துடியலூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜெய்கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே சாலையில் நடந்து சென்ற ஜெய்கணேஷ் என்பவர் கத்தியால் குத்திக்கொலை

முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிஸார் விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளியை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்து சென்றவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version