Tamil News

வவுனியாவில் வீடு புகுந்து தம்பதியினர் எரித்துக் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் இன்று (11.08) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று (11.08) வவுனியா வைத்தியசாலையில் ஆள் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டிருந்த போதும், சாட்சியின் உடல்நிலை சீர் இல்லாத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதனால் சாட்சி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 24 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1ம் சந்தேகநபர் சுகயீனம் காரணமாக சிறைச்சலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் மன்றில் தெரிவித்திருந்தார்.

Exit mobile version