Site icon Tamil News

தமிழகத்தில் கஞ்சா போதை வெறியில் தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் – கஸ்தூரி தம்பதியின் இளைய மகன் சேவாக் (21).சேவாக்கின் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியாக பதில் கூறாமல் போனை வைத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று அங்கு ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் வீட்டின் உள்பகுதியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளதைப் பார்த்து சந்தேகமடைந்த பொலிஸார், அங்கு தோண்டியபோது அதிர்ச்சியடைந்தனர்.கஸ்தூரி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். கஞ்சா போதையில் இருந்த சேவாக் தாய் என்றும் பாராமல் அடித்துக் கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், கொலையாளியான சேவாக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் தனது தாயை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version