Site icon Tamil News

72 வயதில் வெறுங்காலுடன் ஓடி ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டி!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

22வது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023’ விளையாட்டு விழா பிலிப்பைன்ஸில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டிகளில் மொத்தம் 22 நாடுகள் கலந்து கொண்டன. இவற்றில் இந்தியா 70 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 215 பதக்கங்கள்) முதலாமிடத்தினையும், ஜப்பான் 58 தங்கப் பதங்கங்களைப் பெற்று (மொத்தம் 101 பதக்கங்கள்) இரண்டாமிடத்தினையும், பிலிப்பைன்ஸ் 42 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 116 பதக்கங்கள்) மூன்றாமிடத்தையும் பெற்றன. 25 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தமாக 87 பதக்கங்களை பெற்ற இலங்கைக்கு 8-வது இடம் கிடைத்தது.

இதில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார் எஸ். அகிலத் திருநாயகி. 70 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் பங்கேற்று இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அகிலத் திருநாயகி, 800 மீட்டர் பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். 5,000 மீட்டர் நடத்தல் போட்டியில் நான்காம் இடம் பெற்றுள்ளார். இத்தனைக்கும் வெறுங்காலுடன் ஓடியே இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார் . இவருக்கு அந்நாட்டு அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமும் காலை 5 மணிக்கு விழிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அகிலத் திருநாயகி, எந்த உணவையும் அதிகம் உண்ணாமல், அளவோடு உண்டு, எளிய பயிற்சிகளை மேற்கொண்டு உடலை தகுதியாக வைத்திருக்கிறார்.

Exit mobile version