Site icon Tamil News

7 வருடத்தில் 17 முறை மோதிய கார்கள்: மனம் நொந்து வீட்டு உரிமையாளர் எடுத்த முடிவு

கடந்த 7 வருடங்களில் கிட்டத்தட்ட 17 கார்கள் வீட்டின் மீது மோதியதை தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த மனிதர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் வசித்து வரும் ஜூனியஸ் மெர்ரிவெதரின் வீட்டின் மீது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 17 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக ஜூனியஸ் மெர்ரிவெதரின் வீட்டின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.இதில்  வீட்டிற்கு கணிசமான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், இத்தகைய விபத்துகள் மெர்ரிவெதரின் வீட்டின் மீது மீண்டும் மீண்டும் ஏற்பட்டுள்ளது.இதுவரை 17 கார்கள் மெர்ரிவெதரின் கட்டிடத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொறுமையின் எல்லைக்கே சென்ற ஜூனியஸ் மெர்ரிவெதர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக முடிவு செய்ய வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்.மெர்ரிவெதர் தெரிவித்துள்ள தகவலில், எங்கள் வீட்டின் மீது கார்கள் திரும்ப திரும்ப மோதி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

”இது தொடர்பான புகார்களை வழங்கியும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை, நாங்களும் பல முயற்சிகள் செய்து பார்த்து விட்டோம், ஆனால் கார்களின் போக்கை தடுத்து நிறுத்த முடியவில்லை. இது எனது குடும்பத்தினர் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது மற்றும் ஆபத்தில் தள்ளுகிறது”.எனவே இந்த வீட்டை விட்டு வெளியேற நானும் எனது குடும்பமும் முடிவு செய்துள்ளோம், காப்பீடு தொகையை கொண்டு மீண்டும் வீட்டை சரி செய்து விட்டு, அதை வாடகை விட திட்டமிட்டுள்ளோம் என மெர்ரிவெதர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எனக்கு இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எனக்கு இங்கு குடியிருக்கவே விரும்புகிறேன், இதனை நல்ல வடிவத்தில் நான் வடிவமைத்தேன், நானும் எனது மனைவியும் இந்த வீட்டை விரும்புகிறோம்.ஆனால் தற்போது இது போதும், எங்களால் முடியவில்லை, நாங்கள் இந்த வீட்டை காலி செய்கிறோம் என மெர்ரிவெதர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version