Site icon Tamil News

போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த இறுதி சடங்கு வாகனம்;முகமூடி அணிந்த 4பேர் கைது!

பிரித்தானியாவின் கேட்ஸ்ஹெட் பகுதியில் உள்ள மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் போது இறுதி சடங்கு வாகனத்துடன் நுழைந்த 4 முகமூடி அணிந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை டன்ஸ்டன் கால்பந்து அணிக்கும் கேட்ஸ்ஹெட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி கேட்ஸ்ஹெட் பகுதியில் உள்ள UTS மைதானத்தில் நடைபெற்றது.ஆட்டத்தின் பாதி நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில் திடீரென முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் இறுதிச்சடங்கு வாகனத்துடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். மேலும் துண்டு பிரசுரங்களை மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.

அத்துடன் மைதானத்திற்குள் வட்டமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அப்போது மக்களும் தங்களது கையில் இருந்த துண்டு பிரசுரங்களை மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.

https://twitter.com/____B17____/status/1682474280536121344?s=20

இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.இந்த சம்பவத்தில் மைதானத்திற்குள் வாகனத்துடன் நுழைந்த முகமூடி அணிந்த நான்கு பேரையும் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரில் 2 பேர் 19 வயதுடைய டீன் ஏஜ் இளைஞர்கள், ஒருவர் 32 வயதுடையர் என்றும் இவர்கள் மீது அத்துமீறல் வழக்கு சுமத்தப்பட்டு இருப்பதாக நார்த்ம்ப்ரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்காவது நபர் 41 வயதுடையவர் என்றும் அவர் மீது குற்றவியல் சேதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் வைத்து இருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version