Tamil News

திருகோணமலையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 412 குடும்பங்களைச் சேர்ந்த 1254 பேர் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 412 குடும்பங்களைச் சேர்ந்த 1254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்து நிலையத்தினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூநகர், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலம் போட்டாறு, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கோபாலபுரம் சேறுவில பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட பகுதியில் உள்ள மகாவலிகம, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு பகுதியில் வசித்து வந்த 139 குடும்பங்களை சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2023 /12/30 ஆம் திகதி தொடக்கம் உப்பாறு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெரிய பாலம், பாலத்தோப்பூர், ஜின்னா நகர், தாஹா நகர்,ஆலிம் நகர், மூதூர் கிழக்கு, மேங்காமம், நடுதீவு, சேனையூர் கடற்கரை சேனை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த 210 குடும்பங்களை சேர்ந்த 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேறுவில பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிலர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்தார்.

Exit mobile version