Site icon Tamil News

வர்த்தகர்கள், பல்துறைசார்ந்த கடன் பெறுநர்களுக்குப் புதிய சலுகைகள்

பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள் செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதரப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், புதிதாக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் மத்திய வங்கி மேலும் கூறியிருப்பதாவது:

கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பேரண்டப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்கள் ஊடாக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக்காலம், சலுகை வட்டிவீதங்கள், தொழிற்படு மூலதனக்கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கடன் சலுகைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

இச்சலுகைகள் மூலம் சுற்றுலாத்துறை, ஆடையுற்பத்தி, பெருந்தோட்டக்கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, தனியார்துறை என்பன உள்ளடங்கலாகப் பல்தரப்பட்ட துறை சார்ந்தோர் பெரிதும் பயனடைந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கொவிட் – 19 வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட வங்கித்தொழிற்துறை மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனத்துறை என்பனவற்றைச்சேர்ந்த கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கடனைக் காலந்தாழ்த்திச்செலுத்தும் வசதி முறையே 31.03.2022 மற்றும் 30.06.2022 இல் முடிவுற்றது.

 

Exit mobile version