Site icon Tamil News

ராஜஸ்தான் அணிக்கு 198 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ரன்னிலும், ஷாருக் கான் 11 ரன்னிலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

 

Exit mobile version