Site icon Tamil News

முதன்முதலாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவவுள்ள வடகொரியா!

முதன்முதலாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ உள்ளதாக, வடகொரியா நாட்டின் அதிகாரபூர்வ அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்கிறது.

தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி நடத்துவதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஏவுகணை சோதனையை நடத்துகிறது.இந்த நிலையில் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில்,வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும், திட்டமிட்டபடி அதை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் விண்வெளி நிறுவனத்திற்கு அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை பெறுவது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும் உளவு தகவல்களை சேகரிக்கும் திறனை உறுதியாக நிலைநிறுத்த, வடகொரியா பல செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும்.

அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் பெயரில் விரோத ராணுவ பிரசாரங்களை விரிவுபடுத்துகின்றன.விமானம் தாங்கி கப்பல்கள், அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்கள் போன்றவற்றை நிலைநிறுத்துவதன் மூலம் தென்கொரியாவை ஆக்கிரமிப்புக்கான மேம்பட்ட தளமாக அமெரிக்கா மாற்றியுள்ளது.சமீபத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டுப் போர் பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version