Tamil News

சுவிஸில் ஒத்திகை பார்த்து தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த ஆண்டு, மார்ச் மாதம், 24ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Montreux நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஏழாவது மாடியிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள்.

எட்டு வயது சிறுமி ஒருத்தி, அவளது அண்ணனான 15 வயது சிறுவன் ஒருவன், அவர்களுடைய தந்தை, மற்றும் இரட்டையர்களான தாயும் அந்த தாயின் சகோதரி ஆகியோர் அந்த மாடியிலிருந்து குதித்ததில், அந்த 15 வயது சிறுவன் மற்றும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டான். மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள். அந்த சிறுவனுக்கு பழைய விடயங்கள் எதுவுமே நினைவில் இல்லை.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த அந்தக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் இந்த அதிரவைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வருடமாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், இந்த தற்கொலை குறித்து அந்த குடும்பம் ஏற்கனவே தெளிவாக திட்டமிட்டதும், அதற்காக ஒத்திகை கூட பார்த்ததும் தெரியவந்துள்ளது.நேற்று இந்த சம்பவம் தொடர்பாக Vaud மாகாண விசாரணை அதிகாரிகள் அலுவலகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. கோவிட் மற்றும் உக்ரைன் போர் ஆகிய விடயங்கள் அந்த குடும்பத்தினரை கவலையடைய வைத்த நிலையில், அந்த குடும்பத்தினர் யாருக்கும் அதிகாரிகள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், அந்தச் சிறுவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து கல்வி கற்றுக்கொடுத்ததால், அது குறித்து விசாரிக்க அதிகாரிகள் அவர்களுடைய வீட்டுக்கு வந்துள்ளார்கள். ஆகவே, திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்துள்ளது.

 

 

இதற்கிடையில், அந்த குடும்பத்திலுள்ள இரட்டையர்களான சகோதரிகள், அதாவது அந்த பிள்ளைகளின் தாயும் அவரது சகோதரியும், இந்த உலகம் மோசமானது, அது நம்மை வெறுக்கிறது என்ற எண்ணம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.மரணம் என்பது, இந்த மோசமான உலகத்திலிருந்து விடுதலை பெற்று வேறொரு நல்ல உலகத்துக்குச் செல்வதாகும் என அவர்கள் கண்மூடித்தனமாக நம்பியுள்ளார்கள். இந்த நம்பிக்கை குறித்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் பயிற்றுவித்துள்ளார்கள்.

ஆகவேதான், ஒருவர் கூட பயப்படாமல், ஒருவர் பின் ஒருவராக ஐந்து நிமிட இடைவெளியில் மாடியிலிருந்து குதித்திருக்கிறார்கள். அதாவது, தனக்கு முன் ஒருவர் கீழே விழுந்து இறந்ததைக் கண்ட பிறகும், பயமோ, அதிர்ச்சியோ அடையாமல் அடுத்த நபர் குதித்துள்ளார்.ஆகவே, அந்தக் குடும்பத்தில் முடிவுக்கு வேறு யாரும் காரணமல்ல, அவர்களே திட்டமிட்டுதான் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அவர்களுடைய கண்மூடித்தனமான மூட நம்பிக்கைதான் அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்று கூறி, அதிகாரிகள் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

Exit mobile version