Site icon Tamil News

சித்திரை திருவிழாவில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். விலங்குகள் நல வாரிய மாநில உறுப்பினர் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர்,திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஐந்து சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லு கட்டி தழுவி வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், ,வெள்ளி நாணயம், தங்க நாணயம் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறையினர்,வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

Exit mobile version