Site icon Tamil News

சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும்

உயர்தரப் பொதுத் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புத்திக பத்திரன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்படும் தினசரி உதவித் தொகை போதாது எனக்கூறி உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் காலதாமதம் செய்தனர்.

எனவே விண்ணப்ப காலம் நேற்று வரை நீடிக்கப்பட்டதுடன் அதற்கும் ஆசிரியர்கள் உரிய முறையில் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விடைத்தாள் மதிப்பீட்டின் போது தற்போது வழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனையொன்று கல்வி அமைச்சினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் உதவித்தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தொகை போதாது என ஆசிரியர் சங்கங்கள் கூறுவதுடன் இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திற்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Exit mobile version