Site icon Tamil News

கனடாவில் பிரபல வங்கிப் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய இளைஞர் – ஏன் தெரியுமா

சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றை வெளியிட்ட இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கனடாவின் பிரபல வங்கியின் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கனடா நாட்டின் டிடி வங்கியில் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிவந்தவர் இந்திய வம்சாவளி மெஹுல் பிரஜாபதி.

இந்நிலையில், மளிகைப் பொருட்களுக்கான செலவை குறைப்பது குறித்து விளக்கும் காணொளி ஒன்றை பிராஜாபதி அண்மையில் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

“கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கிட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், தேவாலயங்களும் உணவு வங்கிகள் நடத்துகின்றன.

இங்கிருந்து ஒருவாரத்துக்கான பழங்கள், காய்கறிகள், ரொட்டித்துண்டுகள், சாஸ், பாஸ்டா மற்றும் பெட்டியில் அடைக்கப்பட்ட காய்கறிகளை இதோ இதுபோல் இலவசமாக பெற்று வருகிறேன்.

இதனால் எனக்கு மாதாமாதம் பல நூறு டொலர்கள் மிச்சமாகிறது.” என்று தெரிவித்திருந்தார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவை ’எக்ஸ்’ தளத்தில் வேறொருவர் பகிர்ந்து, “இந்த நபர் 98 ஆயிரம் டொலர் ஆண்டு வருமானம் அளிக்கும் டிடி வங்கியில் டேட்டா சைன்ட்டிஸ்டாக பதவி வகித்துக் கொண்டு கருணை அடிப்படையில் அன்னதானம் செய்யும் அமைப்புகளிடமிருந்து எவ்வளவு இலவச உணவை எடுத்து வருகிறார் என்பதை பெருமையாக காட்டும் காணொளியை பதிவிட்டுள்ளார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் மெஹுல் பிரஜபதியின் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஏழைகளுக்கும் தேவைஇருப்பவர்களுக்கும் கொடுக்கப்படும் உணவை கை நிறைய சம்பளம் பெறும் ஒருவர் பொய் சொல்லி வாங்கி சாப்பிடுதல் இழிவான செயல் என்று பலர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து மெஹுல் பிரஜபதியை டிடி வங்கி பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version