இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்வது மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் சிவ ஆலயம் அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், குருந்தூர் மலையில் கம்பீரமாக விகாரை ஈரம்காயாது நிற்கிறது. ஆனால் இன்று வெடுக்குநாறி மலை கண்ணீர் வடிக்கிறது.
எம் இனத்தின் முதுகெலும்புகள் இல்லா அரசியல் வாதிகளால் இற்றை வரை எதுவுமே செய்ய முடியவில்லை. சிவன் கண்ணீர் வடிக்கிறார்.
சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள தெய்வச்சிலைகளை காணும் போது சிதறிய உடலங்கள் போல எங்கள் வணக்க தெய்வங்களை பார்க்கும் போது மனம் மிகவலிக்கிறது. இன்னும் ஏன் இப்ப அமைதியாக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
இச்செயல் ஒவ்வொரு மனங்களிலும் மாறாத ரணத்தை உருவாக்கிவிட்டது. இந்த மனநிலை மாறாத வரை மாற்றான் தாய் மனநிலை தொடந்து கொண்டுதான் இருக்கும். எனவே நிரந்தரமான மாற்றங்களும் தீர்வுகளும் இல்லாதவரை இவை தொடரத்தான் போகின்றது. எனவே இச்செயல் மிகவும் கண்டிக்கதக்க விடயமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.