Site icon Tamil News

இந்து ஆலயங்களை மீள் நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் – ஆறுதிருமுருகன் கோரிக்கை!

அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சைவமக்களின் மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிசிவன்  கோயில் அமைந்திருந்தது.

அச்சிவன் கோயில் தற்போது இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மாவின் சமாதி கோயில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி கதிரைவேலன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களையும் காணவில்லை.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இவ்விடயம் தொடர்பாக  ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிக்கப்பட்ட கோயில்கள் இருந்த இடத்தை சைவமக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம் என்றார்.

Exit mobile version