நடிகை ரம்பா சமீபத்தில் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் சமூகஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனால் நடிகை ரம்பா விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகளும், விஜய் வீட்டுக்கு அருகில் ரம்பா வீடு வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய்யைச் சந்தித்ததற்கான காரணத்தை ரம்பா கூறியுள்ளார்.
அதில், எனது குழந்தைகள் விஜய்யைப் பார்க்க ஆசைப்பட்டனர். நான் விஜய்யின் மேனேஜருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். உடனே விஜய் நேரம் ஒதுக்கி எனது குழந்தைகளைச் சந்தித்தார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அந்த சந்திப்பு நடந்தது. எனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் நடித்த காலங்களில் மிகக் குறைவாகவே பேசுவார்.
எனது மகன் லியோ படம் பார்த்த பின்னர் விஜய்யின் ரசிகராக மாறிவிட்டான். அதனால்தான் விஜய்யைச் சந்தித்தோம். விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான செய்தியை நான் கனடாவில் இருந்தபோது பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் தைரியமான முடிவு.
ஒரு நடிகையாக எனக்கு நடிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் மற்றவற்றில் கிடைக்காது. எனக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் வந்தால் கட்டாயம் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.