Site icon Tamil News

“எப்போது கல்யாணம்?” என்று அடிக்கடி கேட்டவரை அடித்துக் கொன்ற நபர்

“எப்போது கல்யாணம்?” என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியிலுள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ (Asgim Irianto) என்ற ஓய்வு பெற்ற அரச அதிகாரி வாழ்ந்து வந்தார்.

இவருடைய அண்டை வீட்டில் வசித்து வந்த 45 வயது நண்பர் சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம்,

“எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?, 45 வயதாகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்?”  என்று கேட்பதை வழக்கமாகவும், வாடிக்கையாகவும் வைத்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த 2024 ஜூலை 29 ஆம் திகதி திங்கட் கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையொன்றால் கடுமையாக தாக்கியுள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் விரைந்து வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், குறித்த முதியவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சிரேகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டு முதியவரை தாக்கியதாக சிரேகர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version