Site icon Tamil News

இந்தியாவிடம் கோரியது என்ன?

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் முயற்சியில் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதுவதற்கு முடிவு செய்திருப்பதும், மறுபுறம் தமிழ்ப்பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்துவரும் அநீதிகளையும், மறுக்கப்படும் நீதியையும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ,வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்துக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (20.10.2023) ஹர்த்தால் என்னும் பொது முடக்கத்தையும் செய்திருந்தார்கள்.

இந்த முயற்சியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம்,தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடதலை முன்னணி, தமிழ்த்தேசியக்கட்சி ஜனநாயக போராளி கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப்பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாகவும் இதே கட்சிகளே கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தலை ஒழுங்கு படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொதுத்தேர்தல் நெருங்குகின்ற சந்தாடப்பமாகவும் இலங்கையில் எஏதாவது தேர்தலை நடத்தும்படி எதிர்க்கட்சிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகிற நிலையிலும் பாரதப்பிரதமருக்கு தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் தெரிவிக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டு பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுத தீர் மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.கட்சி இலங்கை தமிழர் விவகாரத்தில் பெரியளவு கண்டு கொள்ளா நிலை இருந்துவந்துள்ளமையும் தற்போது இலங்கை தமிழர் விவகாரத்தில் கரிசனை கொண்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சில முன்னெடுப்பக்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது அண்மைக்கால மத்திய அரசின் அரசியல் நகர்வுகள் மூலம் கண்டு கொள்ளக்கூடியதாகவுள்ளது.

மத்திய அரசின் அண்மைக்கால இந்த போக்கு மாற்றத்துக்கான காரணம் தமிழ் நாட்டின் ஆதரவின்றி பா.ஜ. கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நெருக்கடி நிலையொன்று பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் பார்வை இலங்கை ஈழத்தமிழர் விவகாரப்பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் இலங்கைமீதான தலையீடு என்பது 1983 ஆம் ஆண்டுக்கப்பின் பெறுமதி மிக்கதாக இடம் பெற்று வந்திருக்கின என்பது வெளிப்படையாகவே உணர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக 1985 இடம் பெற்ற திம்பு பேச்சுவார்த்தை 1987 இடம் பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தம். யுத்த முடிவின்பின்னான இந்தியாவின் அழுத்தங்கள் இதை தெளிவாகவே விளக்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது வருட ஆட்சிக்காலத்தில் இலங்கை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டப்படவில்லைஎன்பதும் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் ஓர் மென்தன்மை போக்கையே இந்திய அரசு கடைப்பித்து வந்துள்ளது என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் பிராந்திய நலப்பாடுகளும் மாற்று எதிர்பார்ப்புக்களுமாகும். திருகோணமலை எண்ணெய்க்குதங்களை தொடர்ந்து தம் வசம் வைத்திருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு, 2009 பின் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதனை தடுக்கும் முகமாகவும் இலங்கை இனப்பிரச்சனை விவகரத்தில் ஒரு மென்தன்மை போக்கை இந்தியா கடைப்பிடித்து வந்திருக்கிறதென வைத்துக்காள்ளலாம்.

தமிழ் நாட்டிலுள்ள தற்போதைய தி.மு. கட்சி நேரடியாகவே பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியை எதிர்க்கும் போக்கை கொண்டதாகவே காணப்படுகிறது. இது தொடாந்து இடம் பெற்று வருகிற நிகழ்ச்சி. தமிழகத்திலுள்ள மக்களின் ஆதரவு விழுக்காடு அடையுமாயின் அடுத்த தேர்தலில் பா.ஜ. கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பது என்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே போய்விடும்.

பொதுவாகவே பா.ஜ. கட்சிக்கான மக்கள் செல்வாக்கு அல்லது மாநிலங்களின் செல்வாக்கு விழுக்காடு அடைந்துள்ளது என்பதற்கு மணிப்பூரில் இடம் பெற்ற கண் மூடித்தனமான சம்பவங்கள் மற்றும் ஏனைய சம்பவங்களும் பின்னணி வகிக்கலாம். பொதுவாகவே இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி ஒரு கட்சி ஆட்சி என்பது ஒரு தசாப்தத்தை தாண்டி செல்வது என்பது முயற்கொம்பாகவே இருந்து வந்துள்ளது.

இவ்வாறானதொரு எதிர்க்கணிய சூழ் நிலையில் தமிழகத்தை தம் பக்கம் திருப்பவேண்டுமானால் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை பா.ஜ.கட்சி கையில் எடுக்கவேண்டிய அவசியம் உள்ளது என்பது சாதாரண அரசியல் சூத்திரமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது யதார்த்தமாக இருந்தாலும் ஆயுதப்போர் நிகழ்ந்த காலத்தில் ஆயுதங்கள் மீது கொண்ட நம்பிக்கையளவுக்கு அரசியல் மயப்பட்ட ராஜதந்திர முன்னெடுப்புக்களில் எதிர்க்கணியமான நிலை காணப்பட்டதே இன்றைய இந்த நிலைக்கு காரணம் என்றும் வாதிடும் நிலமைகளையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

போர் முடிந்தபின் தமிழர்தம் அரசியல் பயணத்தை பொறுப்பெடுத்துக்கொண்ட தமித்தேசியக் கூட்டமைப்பு உரிய இராஜதந்திரங்களைபாவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் முடிவாகவே கூட்டமைப்பு தற்போது உருக்குலைந்துபோய் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு திசையிலும் ஏனைய கட்சிகள் இன்னொரு திசையிலும் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் தான் இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்துக்கு முடிவுகாணப்படவேண்டும் என்ற கோதாவில் 7 கட்சிகள’ ஒன்று கூடி சில முயற்சிகளை மேற்கொண்டுவருவது வரவேற்க தக்க விடயமாக இருந்தாலும் பாரதப்பிரதமர் இவர்களின் கோரிக்கைகளை எந்தளவு கனதி கொண்டதாக பார்ப்பார் என்பது கேள்விக்குரிய விடயமே.

தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை ஒன்று இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியபோது அதை ஒரு பலம் பொருந்திய அரசியல் தளமாக உருவாக்கவேண்டு மென்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நடைபெறவில்லை.யுத்தத்தின்பின் கூட்டமைப்பு பதியப்படவேண்டும் தனிகட்சிகளின் ஆளுமைக்குள் கூட்டமைப்பு பயணிக்கக்கூடாது என்ற முரண்பாடுகளும் மோதல்களும் கட்சியை இன்று சின்னா பின்னப்படுத்திவிட்டது.

கூட்டமைப்புக்குள் பிச்சல் பிடுங்கல் இருந்து வருகிறபோதும் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் அனைத்துகட்சிகளும் ஒன்றுபடவேண்டிய தேவை உணரப்பட்டாலும் அதற்குரிய மணியை யார் கட்டுவது என்ற நிலையே காணப்படுகிறது. இவ்வாறானதொரு சூழ் நிலையில் 7 கட்சிகளும் சேர்ந்து எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவிடயமாகவே பார்க்கப்படுகிறது.

சுருக்கமாக கூறப்போனால் தமிழ் மக்களின் அரசியல் திர்;வு தொடர்பில் இன்னும் ஒரு தெளிவான தீர் மானத்துக்கு தமிழ்க்கட்சிகள் வரவில்லை என்று உண்மையை புரிநு;து கொள்ளவேண்டும். வரவேண்டிய அவசியம் மக்களாலும் புத்திஜீவிகளாலும் வலியுறுத்தப்படவேண்டும். ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்துங்கள் என தமிழக்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகிறபோது இந்த 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீhக்கப்பட்டுவிடுமா ? அல்லது ஒற்றயாட்சி அமைப்புக்கு அப்பால் சென்று சமஷ்டி முறையிலான தன்னாட்சி முறையை கோருகின்றார்களா என்ற தெளிவான முடிவு காணப்படவேண்டும்.

13 ஆவது திருத்தமென்பது ஒற்றையாட்சி முறைக்குள் உருவாக்கப்பட்ட ஒரு அதிகார பகிர்வு. ஆனால் அந்த பகிர்வு தமிழர்களின் நீண்ட கால அபிலாhஷகளுக்கு தீர்வாக முடியாது என்று கோருவோர் 13 திருத்தத்தையும் கோரும் நிலை இன்று காணப்படுகிறது.

7 கட்சிகள் சேர்ந்து பாரதப்பிரதமர் நரேந்திர மோடியிடம் எதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர் என்பது இன்னும் தெளிவாக தெரியப்படுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்த அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் இந்தியப்பிரதமர் கையில் மேற்படி கடிதம் இன்னும் சேர்ப்பிக்ப்படவில்லை என்ற சந்தேகமும் குறித்த இக்கடிதத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் ஒருவரும் கையெழுத்து இடவில்லை என்ற சந்தேகமும் தெரிவிக்கப்படுகிறது. இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் கட்சிகளுக்கிடையில் இன்னும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் குறித்த நோக்கத்திலும் இன்னும் உடன் பாடு காணப்படவில்லை என்ற உண்மை பச்சையாகவே தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமோ ஒற்றையாட்சியை உடைத்து சமஷ்டிக்கு இடமில்லை. சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என அடித்துக்கூறிவருகிறது. இந்த விடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஒரு கூட்டு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை அவசியமற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடலுக்கான வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம் அனால் உறுதியான முடிவுவும் தீர்மானமும் கொண்டு செல்லப்படவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் தீர்வு விவகாரத்தில் ஒரு தார்மீக கடமை இருக்கிறது என்பது அவர்களால் உதாசீனப்படுத்த முடியாத விடயமாகும்.

நன்றி – அக்னியன்

Exit mobile version