Site icon Tamil News

இலங்கையில் அரசு சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் அரசு சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுமானால் அவற்றை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இதனை அறிவுறுத்தியுள்ளது.

அரச பதவிகளை வகித்து வந்த சிலர் அப்போதைய காலக்கட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர்கள் பதவிகளை விட்டு விலகிய போதிலும் முறைகேடாக பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அவ்வாறு சொத்துக்கள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுமாயின் அவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த சட்ட சபைகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 41 மற்றும் 111ஆவது சரத்துக்களின் பிரகாரம் எவரேனும் ஒருவர் சட்டத்திற்கு அமைவாக அரச சொத்துக்களை ஒப்படைக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version