Tamil News

சிம்ரனை ரிஜெக்ட் செய்த விஜய்? கிளம்பிய வதந்தி… கொந்தளித்த சிம்ரன்

சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். கடைசியாக அந்தகன் படத்தில் நடித்த அவர் இப்போது காட்டமாக பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.

இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் கமிட்டான படங்கள் அனைத்துமே ஒன்று மெகா ஹிட் இல்லை சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன.

சிம்ரனை பொறுத்தவரை அவரது பலமே அவரது அழகும், திறமையும். அவரிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பவர். ஒருபக்கம் வாலியில் கிளாமர் ரோலும் செய்தார், மறுபக்கம் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கண் தெரியாத ருக்குவாக ரசிகர்களை கண் கலங்கவும் செய்தார்.

அதனாலேயே அவரது கொடி தமிழ் சினிமாவில் உச்சம் பறந்தது என்றே சொல்லலாம்.

இதற்கிடையே விஜய்யிடம் சென்று சிம்ரன் வாய்ப்பு கேட்டதாகவும்; அதற்கு விஜய் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவலை சிலர் பரப்பினார்கள். அதாவது விஜய்யை வைத்து படம் தயாரிக்க சிம்ரன் ஆசைப்பட்டதாகவும்; அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த சிம்ரன் இப்போது பொங்கி எழுந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஒருவரை பாதிக்கும்படி பேசுகிறார்கள். அது மன வருத்தமாக இருக்கிறது. எனது திரையுலக வாழ்க்கையில் நான் எந்த வதந்திக்கும் பதிலளித்தது இல்லை. அவைகளை கடந்து சென்றுவிடுவேன்.

ஆனால் என்னை பற்றி சமீபமாக பரவிவரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற நான் ஆசைப்பட்டதே இல்லை. வாய்ப்புகள் வந்தபோது நடிப்பேன். இப்போது எனது வாழ்வு முறை, இலக்குகள் எல்லாம் மாறிவிட்டன.

என் பெயரை இன்னொருவருடன் இணைத்து சமூக வலைதளங்களில் பேசப்படுவதை பல ஆண்டுகள் சகித்துக்கொண்டிருந்தேன். ஆனால் சுயமரியாதை என்பது எல்லாவற்றையும்விட முக்கியம்.

ஸ்டாப் என்பது வலிமையான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துகிறோம். என்னைப் பற்றி வதந்திகள் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்று அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.

இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள். நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். எனக்காக நான் பேச வேண்டும். சினிமா துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version