Tamil News

ரஜினிகாந்தின் வேட்டையன் இசை வெளியீட்டில் விஜய்.. அரங்கமே அதிர்ந்தது

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே இந்த படத்தை கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்னும் சில தினங்களில் அதையும் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

லைகா தயாரித்துள்ள வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் பல சுவாரஸ்யங்கள் அரங்கேறியுள்ளன. அதில் நிகழ்ச்சியில் லைகாவின் அறிமுக வீடியே வெளியானது. இதில் விஜய்யின் கத்தி படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தளபதி, தளபதி என்று அவர்கள் கூப்பிட்டது அரங்கத்தையே அதிரசெய்தது.

கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் சண்டைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ஆடியோ லான்ச்சில் விஜய்யின் வீடியோ வெளியானது மற்றும் அதற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என அடுத்தடுத்த விஷயங்கள் கவனத்தை பெற்றுள்ளன.

போலி என்கவுண்டரை மையமாகக் கொண்டு வேட்டையன் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனக்கு மெசேஜ் படங்கள் சரிப்பட்டு வராது என்று ரஜினிகாந்த் டிஜே ஞானவேலிடம் கூறியதாகவும் அதையடுத்து அவர் வேட்டையன் கதைக்களத்தை கையில் எடுத்ததாகவும் நேற்றைய தினம் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சனுக்கு இடையில் ஏற்படும் கருத்து மோதல் தான் வேட்டையன் படத்தின் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அமிதாப்பச்சனுக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த வேட்டையனின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்தான் காத்திருக்கின்றனர்.

Exit mobile version