Tamil News

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் விஜய்… ரசிகர்களுக்கு அதிரடி கட்டளை

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் கொடுத்து 43 பேர் பலியான நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டமே வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார்.

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்படியொரு அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளது ரசிகர்களையும் தொண்டர்களையும் அப்செட் ஆக்கினாலும், அரசியலில் விஜய் வலுவாக அடியெடுத்து வைத்து விட்டார் என்பதை அறிந்து கொண்டு உற்சாகமாகி உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் என்கிற என். ஆனந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவு!

தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டாது என்றும் கோட் படத்தின் அப்டேட் மட்டுமே விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version