Tamil News

வேட்டையன் வாரார்… கூடவே கங்குவாவும் வாரார்… ஜெய்க்கப்போவது யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தோடு வேட்டையன் மோதுவது உறுதியாகி இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன்.

ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். தொடர்ந்தும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இந்தபடத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியரோலில் நடித்துள்ளனர்.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படம் அக்டோபர் 10ந் தேதி வெளியாக உள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதே நேரம், சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா 10ந் தேதி வெளியாக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரஜினி மற்றும் சூர்யா இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதில் எந்த படம் வசூலை அள்ளும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Exit mobile version