Tamil News

உக்ரைன் அமைதி உச்சநிலை மாநாடு: அனைத்துலகமும் ஒன்றினைந்து ரஷ்யாவுக்கு அழுத்தம் தர முயற்சி

மேற்கத்திய வல்லரசுகளும் மற்ற மேற்கத்திய நாடுகளும் உக்ரேன் தொடர்பில் ஜூன் 15, 16ஆம் திகதிகள் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கின்றன.

இதில் இரண்டாம் நாளான ஞாயிறன்று பங்கேற்கும் நாடுகள் உக்ரேன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவைக் கண்டிப்பதோடு போரினால் ஏற்பட்டுள்ள மனித உயிர்கள் இழப்பை உலகுக்கு எடுத்துரைப்பர் என்றும் கூறப்படுகிறது. .

உச்சநிலை மாநாட்டின் நகல் கூட்டறிக்கையை பார்வையிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ரஷ்ய ஆக்கிரமிப்பு போர் என வர்ணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் போர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை ரஷ்யா எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், உக்ரேனிலுள்ள ஸப்போரிஸ்சியா அணுஉலை, ஏஸோவ் பகுதி துறைமுகங்கள் ஆகியவை மீண்டும் உக்ரேன் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யாவை அடிபணிய வைக்க எண்ணும் மேற்கத்திய நாடுகளுடனான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா வர்ணித்து வருகிறது.ரஷ்யாவின் இந்தக் கூற்றை மறுக்கும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை உக்ரேனுடன் போரிட்டு அதை வெல்லும் நோக்கில் அதன் மீது படையெடுத்திருப்பதாக கூறுகின்றன.

Russia-Ukraine war: peace summit enters second day as west looks to put  pressure on Russia

மாநாட்டில் கூடியுள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன் ஆகியோர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனைத்துலக அளவில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பல மேற்கத்திய தலைவர்கள் உக்ரேனின் இறையாண்மைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சாஸனத்தை மேற்கோள் காட்டி உக்ரேன் ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டித்துள்ளனர். அமைதிக்கு கைமாறாக, உக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுத்தர வேண்டும் என்ற ரஷ்ய கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.

“இந்தப் போரில் ஒன்று நன்றாகத் தெரிகிறது. இதில் ஒருவர் ஆக்கிரமிப்பாளர், அதுதான் புட்டின் மற்றொருவர் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்கள்,” என்று ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறினார்.

ஞாயிறன்று தொடரும் பேச்சுவார்த்தை அணுசக்தி, உணவுப் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகள் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது குறித்ததாகும். அத்துடன் உக்ரேனிய போர்க் கைதிகளையும் சிறார்களையும் உக்ரேனுக்கு திரும்பக் கொண்டுவருவது ஆகியவை தொடர்பானது.

“இதற்கு தேவை அனைத்துலக அழுத்தம். இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் வழக்கத்துக்கு மாறாக மற்ற நாடுகளும் முன்வந்து ரஷ்யா செய்வது நெறிமுறைப்படி கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் இது மாற வேண்டும் என்றும் கூறவேண்டும்,” என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லவன் கருத்துரைத்தார்.

Exit mobile version