Tamil News

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு சீனர்கள் கைது!

நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா- நேபாளம் எல்லையில் உள்ள சித்தார்த் நகரின் கக்ராவா போஸ்டில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீன நாட்டை சேர்ந்த இருவர், சஷாஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சீனாவின் சிச்சுவானைச் சேர்ந்த ஜோ புலின் (27), சோங்கிங்கை பூர்விகமாகக் கொண்ட யுவான் யுஹான் (22) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் உத்தரப் பிரதேசத்துக்கு செல்ல முற்பட்டபோது பாதுகாப்பு படையினரிடம் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட ஜோ புலின், யுவான் யுஹான்

அதைத் தொடர்ந்து அவர்களின் உடைமைகளை சோதித்ததில், அவர்களிடமிருந்து 2 சீன பாஸ்போர்ட்டுகள், நேபாளத்துக்கான சுற்றுலா விசா, மொபைல் போன்கள், இரண்டு சீன சிம்கார்டுகள் மற்றும் இரண்டு சிறிய பைகளில் வெவ்வேறு வகையான 9 அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று எஸ்எஸ்பி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “நேற்று (மார்ச் 26) சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சீன பிரஜைகள் (ஒரு பெண், ஒரு ஆண்) கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் சட்டம் 1946-ன் பிரிவு 14 (ஏ)-ன் கீழ் உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version