Site icon Tamil News

மூன்று வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் வழிநடுவில் உயிரிழந்த சோகம்

மூன்று வருடங்களின் பின்னர் தமது குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர், இடைநடுவிலேயே உயிரிழந்துள்ளார்.

பதுளை – பசறை பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் கடந்த மூன்று வருட காலமாக குவைட் நாட்டில் தொழில்புரிந்து வந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில் விபத்தொன்றை எதிர்கொண்டே உயிரிழந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த குறித்த பெண், விமான நிலையத்திலிருந்து வீடு நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொல்மதுல்லை பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதுண்டு முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் மோதுண்ட பேருந்து , வீதியை விட்டு விலகி, 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொல்மதுல்லை – ரில்ஹேன பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில்  பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் உயிரிழந்த பெண் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பெல்மதுல்லை, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்திருந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மதுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version