Site icon Tamil News

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த 11 வீரர்கள்… அஸ்வின் போட்ட பட்டியல்

ரவிசந்திரன் அஸ்வின் தேர்வு செய்த ஐபிஎல் வரலாற்றில் பெஸ்ட் பிளேயிங் லெவன் குறித்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுகுறித்து இதில் காணலாம்.

கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு என யூ-ட்யூப் சேனல்களை வைத்துக்கொண்டு அதில் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும், கிரிக்கெட் நுணுக்கங்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களில் அஸ்வின், ஷமி உள்ளிட்டோரும் இதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தமிழக வீரர்களில் பத்ரிநாத், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரும் தனித்தனியே தங்களின் யூ-ட்யூப் சேனல்களை வைத்துள்ளனர்.

ரவிசந்திரன் அஸ்வினின் யூ-ட்யூப் சேனலை அடுத்து தமிழில் அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் ஆகியோரின் Cheeky Cheeka சேனலும் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தமிழில் கிரிக்கெட் குறித்து ஆலோசிப்பதும், விவாதிப்பதும் இந்த சேனல்கள் ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமானவையாக மாறுகிறது. அஸ்வினும், அனிருத்தும் எப்போது வீடியோ போடுவார்கள் என காத்திருப்போர் பலரும் உண்டு.

அந்த வகையில், அஸ்வின் (Ravichandran Ashwin) Cheeky Cheeka சேனலில் அனிருதா ஸ்ரீகாந்த் – கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் உடன் கலந்துரையாடும் வீடியோ ஒன்று சில நாள்களுக்கு முன் வெளியானது. அதில் ஐபிஎல் மெகா ஏலம் உள்ளிட்ட கிரிக்கெட் குறித்த பல விஷயங்கள் குறித்து அவர்கள் பேசினர். வழக்கம்போல் ஸ்ரீகாந்தின் அதிரடி சரவெடி காமெடிகளால் அஸ்வின் குழுங்கி குழுங்கிச் சிரித்து மகிழ்ந்தார். இம்பாக்ட் பிளேயர் விதிக்கு அஸ்வின் ஆதரவு தெரிவித்த நிலையில், ஸ்ரீகாந்த் அதனை எதிர்த்திருந்தார். இதுகுறித்தும் இந்த வீடியோவில் பேசப்பட்டது.

இந்நிலையில், அஸ்வினிடம் இதுவரையிலா ஐபிஎல் வரலாற்றில் சிறந்த 11 வீரர்களை (All Time Ipl XI) தேர்வு செய்யும்படி வீடியோவில் கேட்கப்பட்டது. அதில், அஸ்வின் 11 வீரர்களின் பெயரை கூறினார். அவர்களை இங்கு ஒவ்வொருவராக பார்க்கலாம்.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓப்பனிங் பேட்டர்களாக இருப்பார்கள் என அஸ்வின் தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்களில் முதலிடத்தில் விராட் கோலியும், மூன்றாவது வீரராக ரோஹித் சர்மாவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மூன்றாவது வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவின் பெயரை அஸ்வின் கூறினார். Mr. IPL என கூறும் அளவிற்கு ஒரு காலத்தில் சுரேஷ் ரெய்னா கொடிகட்டி பறந்தார். எனவே, ஒன்-டவுனில் அவரை தவிர வேறு யாரும் சிறந்தவர்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஏ பி டிவில்லியர்ஸ் ஆகியோரை அஸ்வின் கூறினார். நான்காவது வீரராக சூர்யகுமார் யாதவும், ஐந்தாவது வீரராக ஏ பி டிவில்லியர்ஸும் இருப்பார்கள் என்றார்.

ஆறாவது வீரராக எம்.எஸ். தோனியை கூறிய அஸ்வின், அவர் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்டராகவும் இருப்பார் என்றார். டிவில்லியர்ஸ், தோனி என இரு பினிஷர்களை அவர் குறிப்பிட்டார். மேலும், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களாக ரஷித் கான் மற்றும் சுனில் நரைனை கூறிய அஸ்வின் வேகப்பந்துவீச்சாளர்களின் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா ஆகியோரை குறிப்பிட்டார்.

இதில், ஐபிஎல் தொடர்களில் 4,965 ரன்களை குவித்த கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்த பொல்லார்டை சேர்க்காமல் சூர்யகுமார் யாதவை சேர்த்தது குறித்தும் ரசிகர்கள் கடுமையான விவாவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர்களாக திகழும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரை சேர்க்காததும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. எனினும், இது அஸ்வினின் தனிப்பட்ட தேர்வு என்பதால் இதில் விமர்சிக்க பெரிதாக ஏதுமில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.

Exit mobile version