Tamil News

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூவர் இலங்கையில்! சி.ஐ.டி விசாரணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று (03) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கையர்களும் 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் திருச்சியில் உள்ள விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ​அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பிய அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை செய்தததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் முருகன் தாம் லண்டனில் உள்ள தமது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளதாக அவர்களது சார்பில் வழக்குகளில் முன்னிலையான புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு அமைய 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்றம் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும் இலங்கையரான சாந்தன் தமது தாயுடன் வாழ்வதற்காக தம்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார்.

இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version