லிஹினிகிரிய, பொத்துஹெர பொத்குல் விகாரையில் வசித்து வந்த பவிலிகமுவைச் சேர்ந்த சுஜாத தேரர் நேற்று (29) இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பரபாவில பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான தனியார் வீடொன்றில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேரர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தேரர் திருமணமானவர் எனவும் அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்த தினத்தன்று, இரவில் தேரரை சந்திக்க வந்த நபர் ஒருவர், வீட்டை கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
அன்றிரவு தேரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தேரருடன் இருந்த நபரே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.