Tamil News

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நிழல் யுத்தம் தீவிரமடைந்து நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தியது. அவற்றை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது.

இந்த தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

US, UK unveil sweeping sanctions on Iran's drone program

ஈரான் தனது தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் அத்தகைய நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கவும் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே ஈரானின் பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால், புதிய பொருளாதாரத் தடை பெற்ற தனிநபர்கள் அமெரிக்க அதிகார வரம்புகளில் பெரிய அளவில் சொத்துக்களை கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, பொருளாதார தடையின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

குறிப்பாக, ஈரானைச் சேர்ந்த 16 தனிநபர்கள் மற்றும் ஈரானில் உள்ள 2 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், ஏப்ரல் 13ம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட டிரோன்களை இயக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கின்றன. எஃகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்கள், ஈரானிய வாகன தயாரிப்பு நிறுவனமான பஹ்மான் குழுமத்தின் மூன்று துணை நிறுவனங்களுக்கும் தடை விதித்தது. இது ஈரானின் ராணுவம் மற்றும் பிற ஆதரவு குழுக்களுக்கு பொருட்களை வழங்கி ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசு, பல ஈரான் ராணுவ கிளைகள் மற்றும் ஈரானின் டிரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தடை விதித்துள்ளது.

Exit mobile version