Tamil News

தங்கைக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்…!

தனது சகோதரிக்கு சொத்தை எழுதி வைத்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாண்டியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் உள்ள சுண்டில்லா கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பா(65). இவரது மனைவி மகாதேவம்மா. இவர்களது மகன் மகாதேவன். சமீப காலமாக நஞ்சப்பாவுக்கும், அவரது மகன் மகாதேவனுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் சொத்து முழுவதையும் மகள் பெயரில் நஞ்சப்பா எழுதி வைத்துள்ளார். இதனால் மகாதேவன் கோபமடைந்தார். தனது பெயருக்கு தனது தந்தை எந்த சொத்தும் எழுதவில்லை என்ற ஆத்திரத்தில் இன்று காலை தனது தந்தை நஞ்சப்பாவுடன் மகாதேவன் தகராறில் ஈடுபட்டார். அத்துடன் தந்தையைத் தாக்கத் தொடங்கினார்.

மாண்டியா ரயில் நிலையம்

இதனால் அவரிடமிருந்து நஞ்சப்பா தப்பிக்க ஓடினார். ஆனால், அவர் மீது கல்லைப் போட்டு கொடூரமான முறையில் மகாதேவன் கொலை செய்தார். இதைத் தடுக்க வந்த நஞ்சப்பாவின் மனைவி மகாதேவம்மாவுக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த மாண்டியா கிராமிய காவல் நிலைய பொலிஸார் விரைந்து வந்து நஞ்சப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மகாதேவனை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். சொத்துப் பிரச்சினையில் தந்தையை மகனே கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் மாண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version