Site icon Tamil News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திப்பதற்கு திட்டமிட்ட ஜனாதிபதி : அதிருப்தியை வெளிப்படுத்திய கட்சி பிரமுகர்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம் அக்கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னர் இது குறித்து கட்சியின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய கட்சியின் பிரமுகர்கள், அவ்வாறாக ஜனாதிபதி கூட்டத்தை கூட்ட விரும்பினால் முதலில் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து அறிந்தவுடன் மாவட்ட தலைவர்களுக்கு கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்ததாகவும், அக்கட்சியின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ‘விசேட திட்டப்பணிகள்’ பிரிவினால் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா மற்றும் மகிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் மாத்திரமே இந்த சந்திப்பை அறிந்திருந்ததாகவும், சிரேஷ்ட தலைவர்கள் துப்பு துலங்கியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

எவ்வாறாயினும், கட்சியின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகம் சந்திப்புக்கு அழைப்பு விடுக்க முடியாது எனவும், இவ்வாறு செய்வது க கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அர்த்தப்படுவதாகவும், கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீவிரமான கவலைகள் முன்வைக்கப்பட்டதோடு, விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் கட்சி அதிகாரிகளுடன் இதுபோன்ற சந்திப்புகளை நடத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி முதலில் கட்சியை கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version