Site icon Tamil News

முல்லைத்தீவில் தாக்குதல் நடத்திவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற நபர்

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த குழு இளைஞன் மீது தாக்குதல் நடாத்திவிட்டு லண்டனுக்கு நாட்டிற்கு தப்பித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இன்று (08.06.2024) அதிகாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வற்றாப்பளை பகுதியில் தமது வீட்டின் முன்பாக தாயுடன் நின்றிருந்த குழந்தை மீது  மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மோதியதில் குழந்தை காயமடைந்த விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து விபத்திற்குள்ளான குறித்த குழந்தை வீட்டாருக்கும் விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த நபருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து சம்பவத்தின் எதிரொலியாக இன்று (08.06.2024) அதிகாலை ஒரு மணியளவில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் குழு ஒன்று கூட்டாக சென்று வீட்டிலுள்ள இளைஞனை தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
அதனையடுத்து அவர்கள் வருகை தந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து  முள்ளியவளை பொலிஸாருடன் சந்தேகநபரின் வீட்டிற்கு சென்று தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த நபர் ஒரு குழுவினை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு குறித்த நபர் லண்டன் நாட்டிற்கு தப்பித்து சென்றதாகவும் இது ஒரு கொலை முயற்சி எனவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் வற்றாப்பளை பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்தோடு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Exit mobile version